
திருமணமான 15 நாட்களில் இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்ப்பு!
காதல் திருமணம் செய்த 15 நாட்களில் இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யுவன்சங்கர் ராஜா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவீனா(21) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது பெற்றோர் இருவரும் ஒன்று சேர விடமாட்டார்கள் எண்ணி யுவன்சங்கர் ராஜாவும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறிக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் ஆன்லைனில் வெளியான வேலைவாய்ப்புமூலம் திருத்தணி அருகே உள்ள பரேஸ்புரம் பகுதியில் உள்ள முயல் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தனர். கணவன் – மனைவி இருவரும் முயல் பண்ணையில் பராமரிப்பு பணி ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தரைக்கிணற்றில் யுவன் சங்கர் ராஜா சடலமாக மிதந்தார். இதுதொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யுவன் சங்கர்ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யுவன் சங்கர் ராஜா எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த 15 நாட்களில் இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


