
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை!
உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கத்தாரில் சிறையில் வைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்தேன். இந்த வழக்குக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர்களிடம் உறுதியளித்தேன்.
அந்தக் குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் விடுதலையைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


