
கோவையில் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிவிட்டு சென்ற 3 பேரை 9 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.
இதனிடையே மூவரையும் நீதிமன்ற வளாகத்திலிருந்து சிலர் பின் தொடர்வதை அறிந்த மூவரும் அங்கிருந்து அவிநாசி சாலை, மேம்பாலம் வழியாகக் காட்டூர் பகுதிக்குள் நுழைந்து தப்பிக்க முற்பட்டனர். தொடர்ந்து அவர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்த 9 நபர்களும் ராம்நகர் ராமர்கோவில் சாலையில் வைத்து ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டத் துவங்கியுள்ளனர்.

இதையடுத்து வாகனத்திலிருந்து இறங்கிய ரஞ்சித் மற்றும் சைமன் ஆகியோர் ஓடத் துவங்கவே இருவரையும் விரட்டி வெட்டிய கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலில் இளைஞர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில் தற்போது அந்தச் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெட்டிய கும்பலைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரும், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவருமான ரவி என்பவர் தலைமையிலான கும்பல் முன்விரோதம் காரணமாகத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாகக் காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



