
பகுஜன் சமாஜ் கட்சி மாநில நலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய சிபிஐ விசாரணை கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி ஆளுநர் ரவியை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், வட சென்னையின் முக்கிய புள்ளியாக இருந்தவரை மர்ம நபர்கள் கடந்த 5ஆம் தேதி வெட்டிக்கொலை செய்தனர். பெரம்பூரில் தனது புதிய வீட்டின் கட்டுமான பணியைப் பார்வையிட்டு வந்தபோது சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,. இந்தக் கொலை தொடர்பாகப் போலீசில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாகவும், எனவே இந்தக் கொலைக்குப் பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் இவர்கள் இல்லையென்றும், வேறு நபர்கள் பின்னனியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆரூத்ரா மோசடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் செயல்பட்டதாகவும் இதன் காரணமாகவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசார் காவலிலிருந்து தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்றபோது திருவேங்கடம் உள்ளிட்ட கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வீடியோவைப் போலீசார் வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழக ஆளுநர் ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் திமுகவுடன் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே தமிழக போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை குற்றவாளியைக் கண்டறியமுடியாத சூழல் நிலவும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவதாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்,


