
பொறி வைத்து மான் வேட்டையாயவர்களை பொறி வைத்துப் பிடித்த வனத்துறை!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பொறி வைத்து மான் வேட்டையாடிய வனத்துறை ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 50 கிலோ மான் இறைச்சி கைப்பற்றப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏராளமான வனப்பகுதி உள்ளது. இங்கு மான், புலி, சிறுத்தை, யானைகள் உள்பட வனவிலங்குகள் உள்ளன. வனத்தை ஒட்டிப் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு.
இந்தநிலையில் மானந்தவாடி அருகே உள்ள காட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் மான் இறைச்சி இருப்பதாகத் தோல்பெட்டி வனவிலங்கு சரணாலய உதவி வனத்துறை அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (67) என்பவரது வீட்டிலிருந்து 50 கிலோ மான் இறைச்சியும், மானை வெட்டப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. அவரைக் கைது செய்து விசாரித்தனர்.
அவருடன் குரியன் (58), தங்கச்சன் (51), சந்திரன் (47) ஆகிய 4 பேர் பொறி வைத்து மான் வேட்டையாடியது தெரியவந்தது. இவர்களில் குரியன், தாமசின் தம்பி ஆவார். சந்திரன் தற்காலிக வன பாதுகாவலராகப் பணிபுரிந்து வருகிறார். உடனடியாக அவர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.



