Annamalai :18 சிறைச்சாலையை மூடப்போறீங்களா.? தவறான முடிவு- திட்டத்தைக் கைவிடுங்கள்!

Advertisements

தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், நிலையில் 18 கிளைச்சிறைசாலைகள் மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

18 கிளைச்சிறைச்சாலை மூடல்

பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள 18 கிளைச்சிறைகளை மூடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கிளைச்சிறைச்சால் மூடும் முடிவைக் கைவிட வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடிப்படை வசதிகளை மேம்படுத்தவோ, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்யவோ நடவடிக்கைகள் எடுக்காமல், கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, திமுகவின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது.

ஒரே அறையில் அதிக கைதிகள்

தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலும் நடந்து கொண்டிருக்கையில், இருக்கும் சிறைச்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் மூட முடிவு செய்திருப்பது, இதர சிறைச்சாலைகள் மற்றும் அங்குப் பணிபுரியும் அதிகாரிகள்மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

சிறையை முடுவதை கைவிடுங்கள்

திமுக மூட முடிவெடுத்துள்ள கிளைச் சிறைகளில், நல்ல நிலையில் உள்ள சிறைகளும் உள்ளன என்று கூறப்படுகிறது. அங்குப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *