
கடலூர் அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியிலிருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கஞ்சமநாதன் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதி மகன் அசோக்குமார் (வயது 26). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அவருக்கும், தூக்கணாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் கடந்த 29ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அசோக் குமார் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தம்பி பேட்டையில் உள்ள விவசாய கிணற்றில் அசோக்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், அந்த விளை நிலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது கை, கால்களை தானே கயிற்றால் கட்டிக் கொண்டு அந்த தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


