
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகத் தமிழக முதலமைச்சர் அரசு உயர் அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து 15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.



