
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தேசிய கொடியை ஏற்றினார்…
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது: சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாகச் சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன். மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்” என்றார்.
மேலும் பேசிய அவர் “இந்தியாவின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது ஆண்டாகத் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல” என்று தெரிவித்தார்.

