சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக திருமா – ஸ்டாலின் சந்திப்பு..!

Advertisements
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை

ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் தொல், திருமாவளவன் சந்தித்து பேசியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெருக்களில் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் சாதி பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனால் அவர் சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுத்தவர். சாதி ஒழிய வேண்டும் என்று குரல் கொடுத்தவர். ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். தந்தை பெரியார் கூட தான் வாழும் காலத்திலேயே ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் இருந்த சாதியை நீக்கி அதிகாரப்பூர்வ அறிவித்தார் என்று குறிப்பிட்டார்.

அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவதால் சாதியை ஆதரிப்பதாக ஆகாது என்றும் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு என்றும்   இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், நீண்ட காலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் வடசென்னையில் காற்று, குடிநீர் போன்ற வாழ்வாதாரங்கள் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே இவற்றை பராமரிக்க மாற்று திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்தும் திட்டம் முதலமைச்சர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர்  உறுதி அளித்துள்ளார்.

அடுத்து எனது சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கைகாட்டி என்ற இடம் வரை 10 கிலோமீட்டர் தூரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. இதனை கொள்கை அளவில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதையும் தெரிவித்ததாக கூறினார்.

சட்டமன்றத்தில் காலம் அனுமதித்தால் இந்தப் பிரச்சினைகள் குறித்து எங்கள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் எனவும் காஸா தொடர்பான தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் முதலமைச்சர் அறிவித்ததற்கு பாராட்டு தெரிவித்ததாகவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

இதனிடையே இகு குறித்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சாதிய பெயர்களை மாற்றுவது என்பது  சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஊர்கள் மற்றும் தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் தமிழக அரசின் அரசாணையை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது  அரசின் இரட்டை நிலைப்பாடு என்பதை வெளிப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் பெயர்களில் உள்ள சாதி அடையாள பெயர்களை நீக்குவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முன்னோர்கள் பலர் தமது பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்கு பல ஏக்கர் நிலங்களை கல்விக் கூடங்களுக்கு தானமாக கொடுத்தும், மக்களின் பொது செயல்பாடுகளுக்காகவும் பல கொடைகளை வழங்கி பல பகுதிகளை வளர்ச்சி அடைய செய்துள்ளனர்.

அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழி, மண், மக்களுக்காக போராடிய தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்களுடன் அவர்கள் பயன்படுத்தி வந்த சமுதாய மற்றும் குல பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு தெருவில், ஒரு ஊரில் குழுவாக நல் உறவு உடன் வசிக்கின்ற மக்கள் அடையாளமாகவும் அந்த பகுதிக்கு அவர்கள் சமூக பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது சாதிய பெயர்களை நீக்குவதாக கூறி அரசு ஒட்டுமொத்தமாக பல சமூகங்களின் அடையாளத்தையே நீக்குவது சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளது. நமது முன்னோர்கள் செய்த தியாகங்களையும் சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளது. இவ்வாறு பெயர் நீக்குவதிலும் புதிய பெயர் சூட்டுவதிலும்  அந்தந்தப் பகுதி மக்கள் மத்தியில் முரண்பாடுகள் எழுந்துள்ளதை மருத்துவர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் ஒரு சமுதாயத்தின் பெயர் நீக்கப்படும் இடத்தில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் பெயர் தான் சூட்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதி மக்களிடத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரும். இது அனைத்து சமுதாயப் பெயர்களுக்கும் பொருந்தும். அந்தந்த பகுதி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் முழு பெயர்களை அந்தந்த பகுதியில் தான் சூட்ட வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் நினைவுகளை அந்த பகுதி மக்கள் நினைவு கூறுவார்கள். அதை தவிர்த்து தன்னிச்சையாக அரசு நிர்வாகம் பெயர் சூட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு முழுக்க இப்படி சமூக அடையாள பெயர்களை அகற்ற நினைத்த தமிழக அரசு 9-ஆம் தேதி கோவையில் தமிழக முதல்வர் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு “ஜி.டி.நாயுடுவின்” பெயரினை வைத்துள்ளது அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
நாயுடு என்பது சாதிய பெயர் இல்லையா ? அப்படி எனில் தலைவர்களின் பெயருடன் வருகின்ற அவர் அடையாள பெயரும் சாதிய பெயர் அல்ல என கொள்ள வேண்டும். சாதியப் பெயர்கள் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்து உள்ளது தமிழ்நாட்டில் பல சமுதாயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயலாக உள்ளது.
சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. காலங்காலமாக இருக்கின்ற இந்த பெயர்களை எல்லாம் நீக்குவது தமிழக மக்கள் இடத்தில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும்.
எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக பொறுமையை கையாண்டு, அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *