
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி மறைவையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவாரெனத் திமுக தலைமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார், இதனையடுத்து மற்ற மாநில தேர்தலோடு விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி ஜூன் 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 21ஆம் தேதியும், ஜூன் 24ஆம் தேதி வேட்பு மீதான பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் திமுக முதல் ஆளாக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னியூர் சிவி திமுகவின் விவசாய தொழிலாளர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
