தந்தை பெரியார்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாகச் சீமானுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
சீமானின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி சீமானுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பதிவில், சீமான் பெயரைக் குறிப்பிடாத எம்.பி. கனிமொழி பெரியாருக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள், அவரை எதிர்த்து, எதிர்த்து ஓய்ந்து போகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“பகுத்தறிவு – சமத்துவம் – பெண் விடுதலை – அறிவியல் வளர்ச்சி – தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர்.
அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்,” என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.