Suicide: காதலன் உயிரிழந்த வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை!

Advertisements

சாலை விபத்தில் காதலன் உயிரிழந்த வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி (21). இவர்  அப்பகுததியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திவாகர் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திவாகர் தனது நிறுவனத்தில் பணியை முடித்து விட்டுச் சிங்காநல்லூர் பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனம்மீது இருசக்கர வாகனம் திடீரென்று மோதியது. இதில் படுகாயமடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவாகர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தர்ஷினி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார். பின்னர் அவர் மருத்துவமனைக்குச் சென்று காதலன் திவாகர் உடலைப் பார்த்து என்னை விட்டுட்டு போயிட்டியே என்று சொல்லிக் கதறி அழுதார். இதையடுத்து பூங்கா நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற தர்ஷினி மனவேதனையில் அழுதபடியே இருந்தார். பின்னர் அவர் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் விபத்தில் உயிரிழந்த செய்தியை அறிந்து காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *