
தமிழ்நாட்டில் முருகனை தொட்டால், ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் வரும் 22-ஆம் தேதி இந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இது சங்கிகள் மாநாடு என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். இந்நிலையில், இந்த மாநாடு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர்கள் ஒப்புக்கு பேசுகிறார்கள், நான் உளமாற முருகனை பற்றி பேசுகிறேன், நான் முருகனின் பேரன், நான் செய்வதற்கும், அவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும், பா.ஜ.க. நேற்று ஆரம்பிக்கட்ட கட்சி அல்ல எனவும், இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் அவர்கள் மாநாடு நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ்நாட்டில் முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்றும், முருகனை தொட்டால் ஓட்டு வருமா என்று பா.ஜ.க. பார்க்கிறது. என்றும், அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களின் அரசியலுக்காக, உத்தர பிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள், ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொடுவார்கள், தமிழ்நாட்டில் முருகனை தொட்டிருக்கிறார்கள் என்றும் நாம் தமிழர் சீமான் தெரிவித்தார்.



