
பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி, வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு, சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடுக்கடலிலும் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்துக்கு, பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே, மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயக்குமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
