
மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டம் ராவல்கானில் வெடித்தொழிற்சாலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாக்பூர் மாவட்டம் ராவல்கானில் சுரங்கங்களுக்கு வெடிபொருள் தயாரிக்கும் எஸ்பிஎல் எனர்ஜி நிறுவனத்தில் இன்று காலை ஏழு மணிக்கு வெடியூக்கிகளை அட்டைப்பெட்டியில் அடைக்கும் பகுதியில் வெடிவிபத்து நேர்ந்தது. அடுத்தடுத்துக் கால்மணிநேரத்துக்குத் தோட்டாக்களும் வெடியூக்கிகளும் வெடித்துச் சிதறின. இந்த வெடிவிபத்தில் அங்குப் பணியாற்றிய 17 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 18 பேரை மீட்டு நாக்பூர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்துள்ள செய்தியில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் ஐந்து இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.




