
இந்திரா காந்தி போன்ற தலைவர் இன்று இருந்திருந்தால், பாரதிய ஜனதாவைப் போன்ற கட்சியை அவர் தடை செய்திருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் பேசினார். அப்போது, இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா கூட்டணியின் தலைமையை ராகுல்காந்தியிடம் கொடுக்க வேண்டும் என்று தான் ஏற்கெனவே கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திரா காந்தி காலத்தில் காங்கிரசுக்கு எதிராக மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, காங்கிரசை அழிப்போம் நாட்டைக் காப்போம் என்று முழங்கியதை நினைவுகூர்ந்தார். அடுத்த இரண்டரை ஆண்டுகளிலேயே மக்கள் மீண்டும் இந்திராவை ஆட்சியில் அமர்த்தியதாகவும் குறிப்பிட்டார்.
இப்போதும் மக்கள் உண்மையை உணர்ந்தால் மீண்டும் காங்கிரசை ஆதரிப்பர் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளே பாஜகவை எதிர்க்கும் என்றும் தெரிவித்தார். தனது வாழ்நாளில் பல்வேறு சூழல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், ஆனால் நாட்டில் இப்போதுள்ள சூழல் மிக ஆபத்தானது என்றும் கூறினார்.
பாஜகவினர் தங்களை இந்துத்துவக் கட்சியாகக் காட்டிக்கொள்ள மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதாகவும், முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்திரா காந்தியைப் போல் ஒரு தலைவர் இன்று இருந்திருந்தால் பாரதிய ஜனதாவைப் போன்ற கட்சியை அவர் தடை செய்திருப்பார் என்று அசோக் கெலாட் கூறினார்.


