
புனே:புனேவிலிருந்து டில்லி செல்லும் விமானத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர், சி.ஐ.எஸ்.எப்., காவலர்கள் மற்றும் இரண்டு சக பயணிகளைச் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயிலிருந்து, புதுடில்லி செல்லும் விமானத்தில் 44 வயதான சுரேகா சிங் என்ற பெண் ஏறினார். அவருக்கும் சக பயணிகளான அன்விதிகா போர்ஸ் மற்றும் ஆதித்யா போர்ஸ் ஆகியோருடன் இருக்கை ஏற்பாடுகள் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. அண்ணன், சகோதரி இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துள்ளதாகக் கூறியதால், சுரேகா சிங் ஆத்திரம் அடைந்தார்.
வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. அப்போது தான், சி.ஐ.எஸ்.எப்., பெண் காவலர்கள் பிரச்னையைச் சரி செய்ய முயற்சித்தனர். அவர்களையும் தாக்கிய சுரேகா, சரமரியாகக் கடித்துக் குதறினார். நிலைமை மோசமடைந்ததால், இறுதியாகச் சுரேகா சிங் மற்றும் அவரது கணவரை விமானத்திலிருந்து வெளியேற்றினர்.
அதிக துயர நிலை
“தனிப்பட்ட அவசர நிலை காரணமாக, சுரேகா சிங் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றியது. சக பயணிகளுடன் அவர் வாக்குவாதத்திற்குப் பிறகு, விமானி அவர்களுடன் செல்ல அனுமதி மறுத்துவிட்டார். விசாரணைக்கு ஆஜர் ஆகக் கூறி, நோட்டீஸ் வழங்கியபிறகு நாங்கள் சுரேகா சிங்-ஐ விடுவித்தோம்” என மூத்த இன்ஸ்பெக்டர் அஜய் சங்கேஸ்வரி கூறினார்.


