
குஜராத் மாநிலம் பவநககரில் உள்ள அரசு மருத்துவமனையில் மூன்றடி உயரமே உள்ள கணேஷ் பரையா மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
2018ஆம் ஆண்டில் நீட் தேர்வில் இவர் வெற்றிபெற்ற போதும் குட்டையாக இருப்பதாலும் உடல் திறன் குறைவாக இருப்பதாலும் இவரை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துவிட்டது. 72 விழுக்காடு மாற்றுத் திறனாளியான இவர் தன்னை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க மறுத்ததை எதிர்த்துக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். உயர் நீதிமன்றம் இவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இவருக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் 2019ஆம் ஆண்டு படிப்பில் சேர்ந்து அதைச் சிறப்பாக முடித்தார். இந்நிலையில் பவநகர் அரசு மருத்துவமனையில் அவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
நோயாளிகளிடம் கனிவாகப் பேசி, அவர்களின் நோயைத் தெரிந்துகொண்டு, மருந்துக்கான பரிந்துரைச் சீட்டை எழுதிக்கொடுக்கிறார். உடல்திறன் சவால்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வெல்ல முடியும் என்பதற்கு ஒரு கண்கண்ட சாட்சியாக மருத்துவர் கணேஷ் பரையா விளங்குகிறார்.



