சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு- காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு தள்ளுபடி

Advertisements
Advertisements

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் விசாரணைக்காக கடந்த  2020-ம் ஆண்டு அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து, பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இதில் அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்  ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டு  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஏற்கனவே பலமுறை தங்களுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் சிறையில் உள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. வழக்கறிஞர்  ஆஜராகி, வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள்,  வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில்  மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.   மேலும், சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கை இன்னும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *