
கேரளாவில் பெய்த கனமழைக்கு, ஒரே வாரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து அடைமழை பெய்தது. குறிப்பாக, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்பட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்து, பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
பம்பை, அச்சன்கோவில், மணிமலை, பெரியாறு மீனச்சல் உள்பட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் கன மழைக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும், 189 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 6 ஆயிரத்து 671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 9.5 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய பொருட்கள் சேதமடைந்தன. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மட்டும் ஓரளவு மழை பெய்தது. மற்ற பகுதிகளில் மழையின் வேகம் குறைந்து காணப்படுகிறது.
